தப்போவ சரணாலயத்தில் தீ பரவல்! 250 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரை(Photos)
தப்போவ சரணாலயத்தில் தீ பரவியுள்ள நிலையில் பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ நேற்று (11.08.2023) பகல் பரவ ஆரம்பித்துள்ளது.
தப்போவ சரணாலயம் 12ம் கட்டைப் பகுதியில் பரவிய தீயினால் சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி தினேந்திர ரனசிங்ஹ தெரிவித்தார்.
அந்த பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணக்கள அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் புத்தளம் நகரசபை தீயணைப்புப் பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்போது புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிபுரைக்கமைய புத்தளம் இராணுவப் பிரிவினர், புத்தளம் நகரசபை தீயணைப்புப் பிரிவினர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலும் தீப்பரவியமைக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லை எனவும் இந்த சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.






