தந்தை செல்வா இருந்த தூய்மையான ஆசனத்தின் தூய்மையை கெடுக்கின்றனர் - வீ.ஆனந்தசங்கரி
தந்தை செல்வா இருந்த தூய்மையான ஆசனத்தின் தூய்மையைக் கெடுக்கின்றனர் என வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற மறைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான தந்தை செல்வாவின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வாவின் திரு உருவச் சிலைக்குத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து நினைவுரையாற்றிய ஆனந்தசங்கரி குறிப்பிடுகையில்,
தந்தை செல்வாவோடு நெருங்கி பழகியவன் நான். அவரது பிறந்த தினத்தன்று போடப்பட்ட மாலையைப் பிய்த்து என் மேல் வீசி ஆசீர்வதித்தார். அதுதான் அவரது இறுதி பிறந்த தினமாகும். அடுத்து வந்த நாட்களில் அவர் உயிர் பிரிந்தார்.
இன்று அவரை வைத்து அரசியல் செய்கின்றனர். தந்தை செல்வாவின் கொள்கை, அவரது இலட்சியம் பற்றி அறியாதவர்கள் இன்று பெரியவருக்கு மாலை போடுவதற்கு முண்டியடிக்கின்றனர். அவரை வைத்து அரசியல் செய்கின்றனர்.
தந்தை செல்வாதான் தமிழரசு கட்சியை உருவாக்கினார் என்பது உலகறிந்த உண்மை. நானும் உறுதியாகச் சொல்கிறேன். ஆனால் அவர் அந்த கட்சியை இல்லாது செய்துவிட்டு தமிழர் விடுதலைக்கூட்டணியை உருவாக்கினார்.
அதன் பின்னர் தமது சுயநலத்திற்காகத் தமிழரசு கட்சியை மீண்டும் கொண்டுவந்தனர். உண்மையில் அது தந்தை செல்வாவிற்கு செய்த துரோகமேயாகும்.
அந்த பெரும் தூய்மையான மனிதர் இருந்த தமிழரசு கட்சியின் கதிரையில் சேனாதிராயா இருப்பது, தூய்மை என்ற சொல்லைக் கேள்விக்குட்படுத்துகின்றது. பொருத்தமான தலைவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
பிரதேச சபைக்கும்,
மாகாணசபைக்கும் ஆசைப்படும் அரசியலிற்காகத் தந்தை செல்வாவை பயன்படுத்துகின்றனர்
எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


