ஒரு லீற்றர் பெட்ரோலை பெற ஒரு லீற்றர் பெட்ரோலை செலவழிக்க வேண்டியுள்ளதாக குற்றச்சாட்டு
மட்டக்களப்பு கடற்தொழிலாளர்கள் மீன்பிடி இயந்திர படகுக்கு ஒரு லீற்றர் பெட்ரோலை பெறுவதற்கு ஒரு லீற்றர் பெட்ரோலை செலவழிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
எனவே கடந்த காலத்தில் கடற்தொழிலாளருக்காக அமைக்கப்பட்ட மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்களில் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கிய முறையின் படி இலகுவாக பெட்ரோலை பெறுவதற்கு அரசாங்க அதிபர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஆவணை செய்ய வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
மட்டக்களப்பு - பாலமீன்மடு பிரதேசத்திலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று முன் தினம் (17.03.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கடற்தொழிலாளர்களின் பிரச்சினை
மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கடற்தொழிலாளர்களுக்கான பெட்ரோல் இன்மை காரணமாக கடற்தொழிலாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இப்போது இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக QR திட்டம் வந்துள்ளது. இதன்காரணமாக மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடற்தொழிலாளர்களுக்கான மண்ணெண்ணெய் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் பெட்ரோலை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

40 குதிரை வலு கொண்ட படகு இயந்திரம் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 2 லீற்றர் பெட்ரோல் தேவைப்படுகிறது. இந்த படகு இயந்திரம் ஸ்ராட்டிங் செய்வது பெட்ரோலில். அதன் பின்னர் மண்ணெண்ணையில் இயங்குகின்றது. அதற்கான மண்ணெண்ணையை எங்களிடத்தில் இருந்து பெற்று வருகின்றனர்.
கடந்த காலத்தில் மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்களில் 500 லீற்றர் பெட்ரோலை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெட்ரோலை பெற்று வழங்கி வந்தோம்.
எதிர்கொள்ளும் சிரமம்
தற்போது QR திட்டம் அறிமுகப்படுத்தியதையடுத்து பெட்ரோலை பெற்று கடற்தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்ய முடியாமல் இருக்கின்றது. கடற்தொழிலாளர்கள் ஒரு லீற்றர் பெட்ரோலை பெறுவதற்காக சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஒரு லீற்றர் பெட்ரோலை செலவழித்து மோட்டார் சைக்கிளில் சென்று பெற வேண்டியுள்ளது.
இதனால் கடற்தொழிலாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே கடந்த காலத்தில் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கிய முறையின்படி வழங்க அனைத்து விடயங்களையும் மேற்கொண்டு இலகுவாக கடற்தொழிலாளர்கள் பெட்ரோலை பெறுவதற்கு அனைத்து ஆவணங்களையும் செய்து தரும்படி கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவி பணிப்பாளர், மட்டு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம் என்றுள்ளார்.