கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் விசேட சோதனை நடவடிக்கை
கோவிட் தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் போக்குவரத்து வாகனங்களை வழிமறித்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் அதிகரித்துள்ள கோவிட் தாக்கம் வவுனியா மாவட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன், இன்று (04.05) காலை 6.30 மணி முதல் விசேட சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
இதன்போது வவுனியா - மன்னார் வீதியின் பட்டானிச்சூர், குருமன்காடு ஆகிய பகுதிகளில் வீதிகளுடாக பயணித்த பயணிகள் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் என்பவற்றை வழிமறித்து சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது சமூக இடைவெளிகளைப் பேணாது அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகளுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ததுடன், முச்சக்கர வண்டிகளில் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராகவும் முறைப்பாடுகளை பதிவு செய்தனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் என்பவற்றில் பயணிக்கும் போது முககவசம் அணியாது சென்றவர்களையும் வழிமறித்த சுகாதார பரிசோதர்கள் அவர்களுக்கு எதிராகவும் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.