மட்டக்களப்பு மாவட்டத்தின் புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன
கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் புதுவருடப் பிறப்பினை வரவேற்கும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
புதுவருடப் பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பேராலயமாக உள்ள மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
சுகாதார நடைமுறைகளைப் பேணியவாறு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இந்த வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பேராயர் அருட்திரு ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை அன்னதாஸ் அடிகளார் மற்றும் அருட்தந்தையர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
இதன்போது கொரோனா அச்சுறுத்தலிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கவும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விரைவில் மீளவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டுள்ளது.
புதுவருட விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டுள்ளது.








