உளவுத்துறை அறிக்கையின்படியே பிரமுகர்களுக்கு விசேட பாதுகாப்பு! அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு என்பது, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுகின்றதே தவிர, அது தன்னிச்சையாக வழங்கப்படுவதில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
விசேட பாதுகாப்பு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அசோக ரன்வல, மொஹமட் ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யோகமகே, சுனில் பியன்வல, தினேஷ் ஹேமமந்த, ரஞ்சித் மத்தும பண்டார, எச்.எம். தர்மசேன மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகிய 11 நபர்களுக்கும் எந்தவித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்பதை விசேட பாதுகாப்புப் பிரிவு பொலிஸ்மா அதிபருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அமைச்சர்களாகிய எமக்கே கூட இத்தகைய விசேட பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு வழங்கப்படுவது தொடர்பாக அமைச்சர் விளக்கமளிக்கையில்,
"தற்போது நடைமுறையில் உள்ள 2020ஆம் ஆண்டின் '2398/26' இலக்க பொலிஸ் சுற்றறிக்கைக்கு அமையவே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதுகாப்புத் தேவை எனக் கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, அரச உளவுச் சேவையினூடாக ஒரு விசேட 'அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை' கோரப்படும்.

அதனடிப்படையில், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையிலான விசேட குழுவின் பரிந்துரையின் பேரே பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு, தற்போது அவர்கள் நாடாளுமன்றத்தில் இல்லாவிட்டாலும், உளவுத்துறையின் அச்சுறுத்தல் விவரங்களின் அடிப்படையிலேயே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri