கடல் வளத்தை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் : அமைச்சர் சந்திரசேகர்
எமது நாட்டுக்குரிய கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் எனவும், அதற்கான விசேட வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற அமைச்சருக்கான வரவேற்பு நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில், அமைச்சர் மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.
கடற்றொழிலாளர்கள் கோரிக்கை
இதன்போது, தமது பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், கடற்றொழிலாளர்கள் இளைப்பாறுவதற்கு உரிய வசதிகள் இல்லை எனவும், உரிய வகையில் நங்கூரமிடும் ஏற்பாடு உட்பட கடற்றொழிலை உரிய வகையில் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சரிடம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை, ரோலர் படகு பயன்பாடு உள்ளிட்டவற்றால் தமக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகள் பற்றியும் மக்கள் எடுத்துரைத்தனர்.
நன்றி தெரிவிப்பு
மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
அத்துடன், இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும் எனவும், அதற்குரிய பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தனக்கான வரவேற்பு நிகழ்வை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பினருக்கு அமைச்சர் நன்றிகளையும் தெரிவித்தார்.
இந்தநிகழ்வில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கடற்றொழில் சங்க தலைவர் ஞா.அன்டன், உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |