கோவிட் தொற்றிலிருந்து நாடு மீள வேண்டி பல பகுதிகளில் விசேட பூசை வழிபாடுகள்
இலங்கையில் அதிகரித்து கோவிட் தொற்றிலிருந்து நாடு மீண்டெழுந்து மக்கள் அனைவரும் சந்தோசமாக வாழ நாடு முழுவதும் சகல ஆலயங்களிலும் விசேட மஹா மிருத்யுஞ்சய ஹோம பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த பிரார்த்தனை மூலம் நாங்கள் இந்த கோவிட்டிலிருந்து விடுபட வேண்டும், எல்லோரும் சுபீட்சமாக வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையாக இது அமைய வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை நாட்டிலுள்ள சகல மதத் தலங்களிலும் வழிபாட்டுப் பிரார்த்தனைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
வவுனியா
வவுனியா மாவட்டத்திலும் பல ஆலயங்களில் மஹா மிருத்யுஞ்சய ஹோம பூஜை வழிபாடுகள் நேற்று (08.05.2021) மாலை 5.46 மணிக்கு இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் குட்செட்வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்திலும் இவ் மஹா மிருத்யுஞ்சய ஹோம பூஜை சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளன.
இவ்விசேட வழிபாட்டில் கோவிட் தொற்று காரணமாகக் கலாச்சார உத்தியோகஸ்தர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என 10க்கு உட்பட்டவர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் சனிக்கிழமை(08) விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ.சண்முக மயூரவதன குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடு மாலை 5.46 மணியளவில் நடைபெற்றது.
இதன் போது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் கலந்து கொண்டிருந்தனர்.
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திலும் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடைபெற்றுள்ளது.
இவ் யாகத்தினை சிவஸ்ரீ கஜன் குருக்கள் மற்றும் பஹவான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் சீடர்களில் ஒருவரான சுவாமி பரதன், தயாளன் ஆகியோர் இணைந்து , ஹோம கிரியைகளை ஆரம்பித்தனர்.
புத்தசாசன சமய விவகார கலாச்சார அலுவல்கள் அமைச்சின் வேண்டுகோளுக்கமைய இந்து சமய
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலய பரிபாலனசபையின் ஆதரவோடு
நடைபெற்ற யாக பூசையில், ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர்கள், ஊடகவியலாளர்கள்
என மிகவும் குறைந்தளவிலானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.