ஆடி அமாவாசையை முன்னிட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் (Video)
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ இன்று (29) நடைபெற்றுள்ளது.
இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினை கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.
தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடியேற்றத்துடன் நடைபெற்றுள்ளது.
ஆடி அமாவாசை
தீர்த்தோற்சவம் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
விசேட பூஜைகள் நடைபெற்று தம்ப பூஜை நடைபெற்று, திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகளும் நடைபெற்றுள்ளன.
இதேவேளை, மாமாங்கேஸ்வரர் எருது வாகனத்தில் எழுந்தருளி மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கரையினை நோக்கி ஊர்வலமாக சென்றிருந்தார்.
மேலும், விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.
இராமபிரான் தனது தந்தையின் மரணத்திற்காக பிதிர்க்கடன் செலுத்தியதாக கருதப்படும் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில், ஆயிரக்கணக்கானோர் தமது பெற்றோருக்கு பிதிர்க்கடன்களை செலுத்தியதையும் காணமுடிந்தது.
கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை அனுஷ்டிப்பு (PHOTOS) |



