யாழில் இன்று நடைபெற்ற விசேட நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு
கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம், வடமாகாண சபை, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகங்கள் இணைந்து நடாத்தும் இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு - விசேட நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (14) யா/பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்தொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரனும், சிறப்பு விருந்தினராக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், கெளரவ விருந்தினர்களாக ஜனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலாளர் ந. சஞ்சீவன், கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர்களான . தசூன் உதார, துலீப் சேமரத்தன ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
சமூக ரீதியான பிரச்சினைகள்
இதன்போது, இராமலிங்கம் சந்திரசேகரர் தமது உரையில், அரச கொள்கை பிரகடனத்தில் கிறீன் ஸ்ரீலங்கா, வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய மூன்று திட்டங்கள் முக்கியமாக காணப்படுவதாகவும் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் சமூக ரீதியான பிரச்சினைகள் கலாசார ரீதியான பிரச்சினைகள் உள்ளதாகவும், அவ்வாறான பிரச்சிகைகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்ததுடன், போதைப் பொருள் பாவனையும் அதிகமாக காணப்படுவதாகவும், இவ்வாறான மனநிலையில் இருப்பவர்களை அவர்களின் மனங்களை மாற்றி நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டே கிளீன் சிறிலங்கா திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னாயத்த நடவடிக்கைகள்
இந்த நிகழ்விற்கு முன்னராக தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் இந்த சேவையில் முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அவ் அறிவுறுத்தவல்களை பின்பற்றி சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்ததுடன் மேலும், சேவைகளைப் பெற்றுக் கொள்ள வருபவர்களுக்கு இலவசமாக தென்னம்பிள்ளை வழங்கப்படவுள்ளதாகவும் கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்திற்கு உதவி புரிந்த ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கும் மாகாண சபை உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து சேவை சிறப்பாக நடைபெற அனைவரது ஒத்துழைப்புகக்ளையும் நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகண சபை செயலாளர்கள், அதிகாரிகள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |














