மன்னார் நகரசபையின் விசேட கூட்டம்: பல்வேறு விடயங்களுக்கு சபை அனுமதி
மன்னார் நகரசபையின் விசேட கூட்டமானது இன்றைய தினம் காலை 10 மணியளவில் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
8 உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில் ஏனைய 8 உறுப்பினர்களுடன் குறித்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட அனுமதி
குறித்த கூட்டத்தில் காசோலையில் முதலாவது மற்றும் இரண்டாவது கையொப்பமிடுதலுக்கான அனுமதி, ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் அனுமதிக்கப்பட்ட வேலைத்திட்டத்தினை சனசமூக நிலையத்திற்கு ஒப்பந்தம் வழங்கி நிறைவேற்றுவதற்கான சபையின் அனுமதி, சபை நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள நகர மண்டப மின்னிணைப்புக்கான மின்மாற்றி அறையினை அமைப்பதற்கு சனசமூக நிலையத்திற்கு ஒப்பந்தம் வழங்கி மேற்கொள்வதற்கான சபையின் அனுமதி, நகரசபையில் கடமையாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் நிரந்தர அலுவலர்கள் சம்பளத்தை வழங்குவதற்கும், நிரந்தர அலுவலர்களின் சம்பளத்தில் 20 வீதத்தினை சபை நிதியில் வழங்குவதற்கும் சபையில் தவிசாளரினால் அனுமதி கோரப்பட்டது.
இதன்போது சபையில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் குறித்த நான்கு விடயங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.










