பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம்
நாட்டில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சிங்கள ஊடகமொன்றுக்கு இது குறித்து தெரிவித்துள்ளார். நாட்டில் அடிக்கடி இடம்பெற்று வரும் விபத்துக்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பயணிகள் பேருந்துகளை செலுத்தும் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, பாரவூர்திகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் மட்டும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான தகுதியாக கருதப்படாது என தெரிவித்துள்ளார்.
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து பேருந்து சாரதிகளுக்கும் இரண்டு வார காலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து இந்த புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகளை திட்டமிட உள்ளதாக அமைச்சர் அமுனுகம தெரிவித்துள்ளார்.
