கிளிநொச்சியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று(24.01.2024) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மணல் அகழ்வை கட்டுப்படுத்தல்
இதன் போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த கூட்டங்களில் பொலிஸ், இராணுவம், கடற்படை பிரிவுகளுக்கு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரால் வலியுறுத்தப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
ஆனால் தற்போது குறித்த நடவடிக்கைகளில் தளர்வு
நிலை காணப்படுகிறது.
இதற்காகவே குறுகிய காலத்தில் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாவட்டத்தில் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தூறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு
மேலும், கிளிநொச்சி குளத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும், குறிப்பாக பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பாளர், கண்டாவளை பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், பச்சிலைப்பள்ளி உதவி பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், துறைசார் திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், இரணைமடு கமக்காரார் அமைப்பின் செயலாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
