மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் சிறப்பு கிறிஸ்மஸ் ஆராதனைகள் (Photos)
மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கோவிட் வழிமுறைகளை பின்பற்றியவாறு கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளிகளை பேணியவாறு பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
மரியால் பேராலயத்தில் பேராயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன.
இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் கரோல் கீதங்களும் பாடப்பட்டன.
இதன்போது கோவிட் அச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் கோவிடினால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து விரைவில் மீளவும் நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை அன்னதாஸ் அடிகளார் மற்றும் அருட்தந்தையர்கள், ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது. கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தனர்.
இன்றைய நாளிலேயே கிறிஸ்மஸ் ஆராதனையின்போது முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் இந்த தேவாலயத்தில் வைத்து ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
