கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் க.பொ.த பரீட்சை எழுத கிழக்கு மாகாணத்தில் விசேட ஏற்பாடு
கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேசிய மட்ட பரீட்சையாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெற இருப்பதால் கிழக்கு மாகாணத்தில், நான்கு கல்வி மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை மற்றும் அம்பாறை ஆகிய கல்வி மாவட்டங்களை மையமாகக் கொண்டு நான்கு பிராந்திய இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான ஆளணியினரும் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வருட க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு கிழக்கு மாகாணத்தில் 53 இணைப்பு நிலையங்களும் 407 பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கிழக்கு மாகாணத்தில் இவ்வருடம் தமிழ் மொழிமூல பரீட்சார்த்திகளாக 22805 மாணவர்களும், சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளாக 6077 மாணவர்களும் மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 28882 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்ற உள்ளனர்.
குறித்த பரீட்சை கடமைகளுக்காக 2340 அதிபர், ஆசிரியர்கள் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளோம்.
மேலும் கோவிட் தொற்று காரணமாக மாணவர் ஒருவர் பரீட்சை எழுத முடியாத சூழ்நிலை
ஏற்பட்டால் தனியான ஒரு பரீட்சை நிலையம் அமைக்க முடியாத பட்சத்திலும், தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒன்றில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக ஏற்பாடுகளும், ஆளணிகளும் தயார் நிலையில் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.