“மன்னார் மாவட்டத்தில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் உள்ளார்களா என்பதை கண்டறிய விசேட நடவடிக்கை“ (VIDEO)
மன்னார் மாவட்டம் உள்ளடங்கலாக வடக்கில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா என்பதைக் கண்டறிய பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று(8) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் (7) புதிதாக மேலும் 46 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 29 பேர் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் தங்கி இருந்து அயலில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற மாணவர்களாகவும், பல்கலைக்கழக மாணவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது தங்கியிருந்த விடுதியின் ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இவர்களுடன் சேர்த்து டிசம்பர் மாதம் 7 நாட்களில் 118 கோவிட் தொற்றாளர்களும், இவ்வருடம் 3041 தொற்றாளர்களும், மாவட்டத்தில் தற்போது வரை 3058 தொற்றாளர்களும் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 29 கோவிட் மரணம் நிகழ்ந்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் தற்போது டெங்கு தீவிரமாகப் பரவி வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி பெற்ற 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 3வது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.
எனினும் குறித்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு காட்டப்படுகின்ற ஆர்வம் முதல் இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளும் போது காட்டப்பட்ட ஆர்வத்தை விடக் குறைவாகக் காணப்படுகின்றது.
எனவே 60 வயதிற்கு மேற்பட்ட பைஸர் மற்றும் சினோபாம் ஆகிய தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் தமது 3 மாதங்களைப் பூர்த்தி செய்தவர்கள் தமது 3வது தடுப்பூசியை விரைவாகச் செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்.
தற்போது பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் அதிகமாக நடமாடித் திரிகின்ற நிலையில் மக்கள் சுகாதார வழி முறைகளை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பாக உலகளாவிய ரீதியாக புதிய அச்சுறுத்தலாக வரக்கூடும் என எதிர் பார்க்கப்படுகின்ற ஒமிக்ரோன் திரிபு இலங்கையிலும் ஒருவருக்கு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த திரிபு இலங்கையிலும் பரவக்கூடிய சூழ்நிலையில்,மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் நடமாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மன்னார் மாவட்டம் உள்ளடங்கலாக வடக்கில் ஒமிக்ரோன் திரிவுடையவர்கள் உள்ளார்களா? என்பதைக் கண்டறிய இன்று(8) தொடக்கம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு சிறி ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும்.
அதன் முடிவுகளிலிருந்து புதிதாக ஒமிக்ரோன் திரிபுடைய தொற்றாளர்கள் இருக்கின்றார்களா? என்பது தொடர்பில் கண்டறிய முடியும். மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பனங்கட்டுகொட்டு, பெரிய கடை, சின்னக்கடை, மூர்வீதி, மற்றும் பேசாலை பகுதிகளில் அதிக அளவில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 83 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் நவம்பர் மாதம் 26 டெங்கு நோயாளர்களும் டிசம்பர் மாதம் 7 நாட்களில் 27 டெங்கு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுளம்பு பெருகக் கூடிய இடங்களை அடையாளம் கண்டு, அழிப்பது, அகற்றுவது அல்லது
சுத்திகரிப்பது மற்றும் நுளம்பின் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களைப்
பாதுகாப்பது கட்டாயமானதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.