பிரபல நாளிதழின் ஆசிரியரை கண்டித்துள்ள சபாநாயகர்
கடந்த 4ஆம் திகதி வெளியான செய்தி தொடர்பில் முன்னணி ஆங்கில செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (05.12.2022) கண்டித்துள்ளார்.
சபாநாயகர் விடுத்த அறிவுறுத்தல்
உண்மையை கண்டறிந்தும், அதிக பொறுப்புணர்வோடும் துல்லியத்துடனும் செய்திகளை வெளியிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நடவடிக்கையை குழு நிராகரிக்கிறது என்ற தலைப்பில் கடந்த 4 ஆம் திகதி வெளியான செய்தி தவறானது என்ற அடிப்படையில் சபாநாயகர் இந்த அறிவுறுத்தலை விடுத்தார்.
செயலாளர் நாயகத்தின் ஓய்வு
அண்மையில் சபாநாயகர் காரியாலயத்தில் அவர் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற ஊழியர் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தின் ஓய்வு குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்த நேற்று நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
சபாநாயகர் தலைமையிலான குறித்த சந்திப்பில் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் அல்லது அவரது ஊழியர்கள் தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த அறிக்கைக்கு பொறுப்பானவர்களை நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள்
தொடர்பான குழுவுக்கு அழைக்குமாறு அவைத்தலைவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.