1 ட்ரில்லியன் டொலர் மதிப்பில் பங்குச்சந்தையில் களமிறங்கும் ஸ்பேஸ் எக்ஸ்
உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி மற்றும் செயற்கைக்கோள் நிறுவனமான எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' (SpaceX), பொதுப் பங்கு வெளியீடு (IPO) மூலம் பங்குச்சந்தையில் நுழையத் தயாராகி வருகிறது.
இதற்கான ரகசிய ஆவணங்களை அமெரிக்கப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடன் அந்த நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. ஒரு தனியார் நிறுவனம் முதன்முதலாகத் தனது நிறுவனப் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதே பொதுப் பங்கு வெளியீடு ஆகும்.
இந்த பொதுப் பங்கு வழங்கலை தொடர்ந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 ட்ரில்லியன் டொலரை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியைத் திரட்ட இலக்கு..
இதன் மூலம், உலகின் முதல் 'ட்ரில்லியனர்' (Trillionaire) என்ற பெருமையை எலான் மஸ்க் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் எதிர்வரும் ஜூன் மாதத்தில் அதிகாரப்பூர்வமாகப் பொதுப் பட்டியலுக்கு வரத் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் 50 பில்லியன் டொலர் அல்லது அதற்கும் அதிகமான நிதியைத் திரட்ட இலக்கு வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI உடன் ஸ்பேஸ் எக்ஸ் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
விண்வெளி உள்கட்டமைப்பு, ஏவுகணைத் தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை போன்ற பிரம்மாண்டத் திட்டங்களுக்குத் தேவைப்படும் பெரும் நிதியைப் பூர்த்தி செய்ய இந்தப் பங்கு வெளியீடு உதவும் என்று சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர். இது உலகப் பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிக முக்கியமான நிதி நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.