செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் கலைக்கப்படுமா! அமைச்சர் சமந்த வித்தியாரத்தின விளக்கம்
செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியன அரசாங்கத்தின் நிதியிலேயே இயங்குவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்தின கூறியுள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர்,''இவ்வாறான பல நிறுவனங்கள் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திட்டங்கள்
இவை நாட்டுக்கு பெரும் சுமையாகவும் மக்கள் பணம் அநியாயமாக பயன்படுத்தப்படுமானால் அவற்றை ஒன்றிணைப்பது அல்லது வேறு ஒரு பொறிமுறையில் இயக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (People's Plantation Development Board)இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் (Sri Lanka State Plantation Corporation)இந்த இரு நிறுவனங்களுக்கும் தலைவர் மற்றும் முகாமைத்துவ உறுப்பினர் நியமிக்கப்படுள்ளனர்.
ஆனால் இவை இரண்டிலும் ஒரே செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு பெரும் நிதியளிக்கப்படுகிறது. நாம் இவற்றை ஒன்றிணைத்து ஒரு நிறுவனமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
விற்பனை செய்யப்படும் என்பது பொய்யான பிரசாரமாகும். தென்னை அபிவிருத்தி அதிகார சபை,தென்னை அபிவிருத்தி மன்றம் இரண்டும் தென்னை தானே.மேலும் தேயிலை சபை மற்றும் சிறு தேயிலை தோட்ட அதிகார சபை இவை ஒரே செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றன.
அரசாங்கத்தின் புதிய திட்டங்களுக்கு அமைய மக்கள் நிதியை வீணடிக்காமல் துரித சேவையை முன்னெடுப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.''என கூறியுள்ளார்.



