அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக விசேட அபிவிருத்தி திட்டம்
கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் அண்டியதாகக் காணப்படும் அதிக போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக அந்த நகர வீதிகள் மற்றும் அதிக நெரிசல் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பிரதேச வீதிகள் மற்றும் மாற்று வீதி கட்டமைப்பு என்பவற்றை அபிவிருத்தி செய்யவும், பாலங்களை நிர்மாணிக்கவும் விசேட அபிவிருத்தித் திட்டமொன்றை ஆரம்பிக்க இருப்பதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலும் மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக நெடுஞ்சாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைவர் சமிந்த அதலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதன்படி, இந்த விசேட வீதி அபிவிருத்தித் திட்டம் கொழும்பு, கண்டி, காலி, குருநாகல் மற்றும் கம்பஹா நகரங்களை மையமாகக் கொண்டு தொடங்கப்படும். அதன் பிறகு, இந்த விசேட வீதி அபிவிருத்தித் திட்டம் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படும்.
குறிப்பாகத் தினசரி வேலை நேரத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் இந்த நகரங்களில் பல மணிநேரம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலினால் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் தடை ஏற்படுகிறது.
இந்த விசேட வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட 9 வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மேலும், கம்பஹா நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக 15 வீதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கண்டி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாகவுள்ள 12 வீதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
காலி நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு 8 வீதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இத்தேபான மற்றும் மாது கங்கைக்குக் குறுக்கே 02 பாலங்களை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்தோடு குருணாகல் நகரில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை நீக்குவதற்காக மாற்று வீதிகளை நிர்மாணிக்கவும் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர யாங்கல்மோதர, அலவ்வ, மஹவ மற்றும் முத்தெட்டுக்கல ஆகிய பிரதேசங்களில் மேம்பாலம் அமைக்கவும் ஒரு மாற்று வீதி அமைக்கவும் பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனைத்து வீதி கட்டமைப்புகளுடனும் தொடர்புள்ள வீதி சமிக்ஞை கட்டமைப்புகள் மற்றும் சுற்று வட்டங்கள் போன்றவற்றை நிர்மாணிக்கவும்
உத்தேசிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.