பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் நல்லூர் திருவிழாவுக்கு மண் விநியோகம்!
அம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்காக மணல் விநியோகம் நேற்று(26) இடம்பெற்றுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடம் தோறும் குறிப்பிட்ட மணல் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து தமது பிரதேசத்தில் கூடியளவில் மணல் அகழப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்தும் கிராமத்தை அழிவிற்கு உட்படுத்தக் கூடாது என்பதன் அடிப்படையிலும், இம்முறை மணல் மண் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மணல் மண் வழங்க மறுத்திருந்தனர்.
மண் விநியோகம்
இந்நிலையில், நேற்றைய தினம் பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் பொலிஸ் பாதுகாப்புடன் மண் விநியோகம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
நேற்று காலை 9 மணி முதல் மண் விநியோகம் தொடர்பான முறுகல் நிலை அம்பன் பிரதேசத்தில் பிரதேச செயலர் மற்றும் கிராம மக்களுக்கு இடையில் இடம் பெற்றது. மக்கள் எதிர்ப்பினையும் மீறி நல்லூர் முருகன் ஆலயத்திற்கு மணல் மண் விநியோகம் இடம்பெறுகிறது.
வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் தனது கிராமத்தில் மணல் மண் அகழ்வு மேற்கொள்ள வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மீறி தனி நபர் ஒருவரது பெயரில் கனிய வளங்கள் மற்றும் புவிச்சரிதவியல் திணைக்களத்தின் அனுமதியினை பெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
உரிமை மீறல் வழக்கு
சில வருடங்களுக்கு முன்னர் தனி நபர்கள் எவருக்கும் கனியமணல் அகழ்விற்கு அனுமதி வழங்க கூடாது என ஒருங்கிணைப்பு குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் அதனையும் மீறி தனி நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணல் அகழ்விற்கு திரு.சகாதேவன் அனுமதி கோரப்பட்டிருந்தது. தனி நபர் ஒருவருக்கு வழங்க முடியாதென பிரதேச செயலகம் அறிவித்துருந்தது.
அதனை எதிர்த்து திரு.சகாதேவனால் உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்திருந்த நிலையில் இது தொடர்பாக பிரதேச செயலகத்தால் ஒருங்கிணைப்பு குழு தீர்மானத்தின் பிரகாரம் தனிநபர் எவருக்கும் மணல்மண் அகழ அனுமதி வழங்கக்கூடாதென மன்றிற்கு அறிவித்திருந்தது.
இந்நிலையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் தனி நபர் ஒருவருக்க கனிய மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




