பெண்களிடம் தங்க ஆபரணம் மற்றும் கைப்பைகளை கொள்ளையிட்ட கணனி மென்பொருள் பொறியிலாளர்
பெண்ணொருவரின் தங்க ஆபரணம் மற்றும் கைப்பையை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற கணனி மென்பொருள் பொறியியலாளர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக பொல்கஹாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு - கோட்டையில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த புகையிரதத்தில் பயணித்த பெண்ணொருவரின் தங்க ஆபரணம் மற்றும் கைப்பை என்பன பொல்கஹாவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக பெண்ணொருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனடிப்படையில் பொல்கஹாவெல பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய விசாரணையினை அடுத்து, கைப்பை மற்றும் 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகளை வைத்திருந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நீண்டகாலமாக புறக்கோட்டை பேருந்து நிலையம் பல்வேறு பிரதேசங்களில் பெண்களின் கைப்பைகள் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தங்க ஆபரணங்களை அடகு வைத்து அப்பணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை பெற்று பயன்படுத்துவதாகவும், தான் கணனி மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றுவதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.