மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 312 பேர் கோவிட்டால் உயிரிழப்பு - வைத்தியர் மயூரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் அறிவுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 65 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 65 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 312 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், கடந்த வாரத்தில் 728 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 24 பேர் மரணமடைந்துள்ளனர்.
தடுப்பூசியைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 2 இலட்சத்து 85 ஆயிரம் பேருக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன், இரண்டாவது தடுப்பூசி 2 இலட்சத்து 41 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அவரவர் பகுதிகளில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அட்டவணையின் அடிப்படையில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு ஆதார வைத்தியசாலைகள் ஊடாகவும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். களுவாஞ்சிகுடி, காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை ஆகிய ஆதார வைத்தியசாலைகள் ஊடாக இந்த தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதன் மூலமாக கோவிட் தொற்றினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும். அத்துடன் வைத்தியசாலை அனுமதிகளையும் குறைத்துக் கொள்ள முடியும்.
முடக்கத்தினை பயன்படுத்தி அனைவரும் வீட்டில் இருப்பதன் மூலம் கோவிட் தொற்றினை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய தொற்றாளர்களின் தொகை குறைவடைந்து வருவதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருகின்றது.
இதனை தொடர்ந்து பேணுவதற்காக மக்களின் சமூக பொறுப்புணர்வு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்துள்ளார்.