ஈரான் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹக்கீம் எம்.பி கண்டனம்
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரவூப் ஹக்கீம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை,கோட்பாடுகளுக்கு விதிவிலக்காக நடந்து கொள்ளும் வன்முறைக் கலாசாரத்திலிருந்து தோன்றிய நெதன்யாகு அரசாங்கம், ஜூன் 13, 2025 அன்று ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது முற்றிலும் நியாயமற்ற மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.
கொடூர செயல்
இது ஈரானை ஸ்திரமற்ற தன்மைக்கு உள்ளாக்கவும் மத்திய கிழக்கு மற்றும் பரந்துபட்ட அந்தப் பிராந்தியத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் அப்பட்டமான முயற்சியாகும்.
இஸ்ரேலுக்கு முதுகெலும்பாக விளங்கும் அதற்கு ஆதரவான நாடுகளின் முழுமையான ஒத்துழைப்புடன் ஈவிரக்கமற்ற முறையில் செயல்படுத்தப்பட்ட இந்தக் கொடூரமான செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வாறான அடர்ந்தேற்றத்திற்கும், ஆக்கிரமிப்பிற்கும் எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான முழு உரிமையும் ஈரானுக்கு உண்டு. காசாவிலும் , மேற்குக் கரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்கு பொறுப்பான நெதன்யாகு மற்றும் அவரது இனப்படுகொலைக் கும்பலின் கொடூரமான போக்கை இயல்பானதாக ஆக்கி,அதனை கண்டுகொள்ளாது போல நடிந்து கொள்வது உலகளாவிய அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் மிகவும் குந்தகமானதும், ஆபத்தானதுமாகும்.
உடனடி நடவடிக்கை
ஈரானுக்கும் ,உலகின் எந்த நாட்டிற்கும் அணுசக்தியை அமைதியான முறையில் ஆராய்ந்து,அறிந்து உரிய முறையில் கையாள்வதற்கான உரிமை உண்டு. ஈரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாகும், மேலும் அது சர்வதேச அணுசக்தி அதிகார சபையின்( IAEA) பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
எந்தக் காரணத்திற்காகவும், இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைக்கான நெறி முறைகளை மீறி, எந்தவொரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டிற்கு எதிராக ஒருதலைப்பட்சமாக எவ்வாறான யுத்த நடவடிக்கையையும் தன்னிச்சையாக மேற்கொள்வதற்கு அறவே அதிகாரம் இல்லை.
முழு மத்திய கிழக்கையும் அணு ஆயுதங்கள் உட்பட பேரழிவை ஏற்படுத்தக் கூடிய பயங்கர ஆயுதங்கள் இல்லாத பிராந்தியமாக பிரகடனப்படுத்த வேண்டுமென்றும், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் நாங்கள் கோருகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
