இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சிறிய வாய்ப்பே இருக்கின்றது! - புவியியல் அறிஞர்கள்
இந்திய - அவுஸ்திரேலிய நிலத்தட்டின் மையத்திற்கு அருகில் இலங்கை அமைந்திருப்பதால், நிலநடுக்கம் ஏற்படுவதற்கான ஒரு சிறிய வாய்ப்பே இருப்பதாக இலங்கையின் புவியியல் அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தில் இன்று நடத்தப்பட்ட சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் உட்பட பல பகுதிகளில் அவ்வப்போது ஏற்பட்ட சிறிய நில நடுக்கம் காரணமாக, எதிர்காலத்தில், இலங்கையில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்பதை தெளிவுபடுத்துவதற்காக இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
தற்போது நிகழும் புவியதிர்வுகளில் 98 வீதமானவை, தட்டு எல்லைக்கு அருகில் ஏற்படுகின்றன. தட்டு எல்லைக்கு வெளியே, புவியதிர்வின் அளவு 2 வீதம் வரை குறைவாக உள்ளது.
எனவே தேவையற்ற பயத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அவற்றில் இருந்து பாதுகாக்க தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுப்பது நல்லது என புவியதிர்வுகள் தொடர்பான நிபுணர் குழு இந்த நிகழ்வில் கூறியது.
இந்நிலையில் மகாகந்தாராவ, பல்லேகல, ஹக்மன மற்றும் புத்தங்கல ஆகிய இடங்களில் நான்கு நில அதிர்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு எதிர்காலத்தில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைக்கப்படும் என்றும் இந்த நிகழ்வில் கூறப்பட்டது.
சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிவுறுத்தலின் பேரில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின்படி விக்டோரியா நீர்த்தேக்கத்தைச் சுற்றி பத்து நுண்ணிய நில அதிர்வு அலகுகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன என்றும் அங்கு கூறப்பட்டது.