ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள உறுதியான தீர்மானம் குறித்து வெளியாகியுள்ள தகவல்
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்து விலகி, தனித்து போட்டியிடுவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இது சம்பந்தமாக கடந்த சில வாரங்களாக சில சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு தனித்து போட்டியிட அந்த கட்சி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் மேலும் சில சிறிய கட்சிகளை இணைத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் கீழ் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை சுதந்திரக் கட்சி ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை தாம் சுமக்க வேண்டியதில்லை என்பது சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களின் நிலைப்பாடாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
இதனடிப்படையில், ஏற்கனவே பகிரங்கமாக கூறியபடி, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara), நாடாளுமன்றத்தில் இருந்து விலகி, வடமேல் மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவார் எனவும் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake), தனது தந்தையான பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவின் உரிமைக்கு அமைய வடமத்திய மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.