மாவட்ட செயலகத்தில் பிள்ளையான் - சாணக்கியன் இடையே கடும் வாக்குவாதம்! வியாழேந்திரனும் போராட்டத்தில் (video)
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தமைமையில் இன்று (30.03.2023) மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
எனவே இந்த விடயம் குறித்து இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே வைத்து பூட்டப்பட்டுள்ளனர்.
இருப்பினும் கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோர் மாவட்ட செயலகத்துக்குள் சென்றுள்ளனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கூட்டத்தின் இடையிலே நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது,.
இரண்டாம் இணைப்பு
மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை (30.03.2023) ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தங்களது பிரச்சினைகளை முன்வைப்பதற்காக வருகை தந்த பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை புறந்தள்ளி அதுவும் இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியில் வைத்து பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், மாவட்ட அரசாங்க அதிபரும் இணைந்து சர்வாதிகாரப் போக்குடன் அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பொதுமக்களையும் , பொதுமக்களுக்காக குரல் கொடுக்க வந்த இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் என அனைவரையும் மாவட்ட செயலகத்திற்கு வெளியே வைத்து பூட்டி விட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபர், அதிகாரிகளும் இணைந்து அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியதால் மாவட்ட செயலகத்திற்கு வெளியே பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக காணிகளை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்மொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பார்ட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் பொது மக்களால் இன்று (30.03.2023) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தமது வயல் காணிகளை விட்டுக்கொடுக்க முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
காணி பிரச்சினை
இதன்போது மயிலத்தமடு, மாதவனை பிரதேச பண்ணையாளர் பிரச்சினை, மணல் அனுமதிப் பத்திரம் வழங்கல் தொடர்பான பிரச்சினைகள், வாகரை கடற்தொழிலாளர்கல் பிரச்சினை, காணிகளை தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய வேண்டிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இவற்றை எல்லாம் கணக்கிடாது பிரச்சினைகளை தெரிவிக்க வந்த பொதுமக்களையும் , பொதுமக்களுக்காக குரல் கொடுக்க வந்த இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களை என மாவட்ட செயலகத்திற்கு வெளியே வைத்து பூட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபர், அதிகாரிகளும் இணைந்து அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியதால் மாவட்ட செயலகத்திற்கு வெளியே பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.