சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள வெற்றி!
இந்த ஆண்டு ஜூன் மாதமளவில், 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை பூர்த்தி செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஏனைய மாதங்களை விட இந்த மாதம் தேவை அதிகமாக இருந்த நிலையிலும் இவ்வாறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை பூர்த்தி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார சபையின் நிலையான திட்டம்
இதேவேளை, 1990ஆம் ஆண்டின் முற்பகுதிக்குப் பிறகு முதல் முறையாக, இலங்கை மின்சார சபையானது இந்த மாத நிலவரப்படி அதன் மொத்த மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் மின்சார விநியோகம் சுமார் 100 சதவீதம் நீர் மின்சாரம் சார்ந்தது என்ற ஆரம்பக்கால கொள்கையிலிருந்தும், காலப்போக்கில் பின்பற்றப்பட்ட கலப்பின நீர் மின் - அனல் மின் கொள்கையிலிருந்தும் இது ஒரு விலகலைக் காட்டுவதாக மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க மின்சார சதவீத்தை அதிகரிப்பதற்கான இலங்கை மின்சார சபையின் நிலையான திட்டத்தின் வெற்றியை இது பிரதிபலிப்பதாகவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
