தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மதுபான விருந்து நடத்தியவர்கள் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நேற்றிரவு முதல் இன்று மதியம் வரை மதுபான விருந்தை நடத்திக் கொண்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண தெற்கு விசேட குற்றப் பிரிவினர் வெலிகடை பொலிஸ் பிரிவின் ராஜகிரிய பிரதேசத்தில் விடுதி ஒன்றில் இன்று மதியம் இவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவரிடம் இருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சந்தேகநபர் கைது செய்வதற்கான இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தவர் எனவும் அவர் கிரிவத்துடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு விசேட குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரில் இருவர் பெண்கள் எனவும் இவர்களுக்கு தங்குமிடத்தை வழங்கிய விடுதி முகாமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.