தந்தை பணக்கார தொழிலதிபர் என கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த யாழ். சகோதரிகள்
போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 120 மில்லியன் ரூபாவை மோசடி செய்த சகோதரிகள் இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 30 மற்றும் 34 வயதுடைய யாழ்ப்பாணம் - நாவாந்துறையைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணையில் வெளியான தகவல்
இவர்கள் இருவரும் நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை 2021 ஜனவரி முதல் ஜூன் வரை 23 வங்கிக் கணக்குகள் மூலம் 120 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இறந்த தங்கள் தந்தை ஒரு பணக்கார தொழிலதிபர் என்றும், அவருக்கு ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தங்க நகைகள் உட்பட பண சொத்துக்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நிதியை விடுவிப்பதற்கான சட்டச் சிக்கல்களைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த சூழலில் இருவரும் தன்னை ஏமாற்றி வந்ததை நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் உணர்ந்துள்ளார்.
அவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் சகோதரிகள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
போலி ஆவணங்கள்
கைது செய்யப்பட்ட இருவரும் பல்வேறு அரச அதிகாரிகள், வங்கி முகாமையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கிராம அலுவலகர்களால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் உட்பட ஏராளமான போலி ஆவணங்களை வைத்திருந்ததாக தெரியவருகிறது.
வங்கி புத்தகங்கள் மற்றும் வங்கி பற்றுச்சீட்டுகளும் அவர்களிடம் இருந்துள்ளன.
இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, சகோதரிகள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.