சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்:சிவசுப்பிரமணியம் பத்மநாதன்(Photos)
தமிழினம் அழிவின் விளிம்பிலிருந்து தப்ப வேண்டும் என்றால் தமிழர் தாயம் மீதான நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக வேந்தர் சிவசுப்பிரமணியம் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பவள விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு, இன்றைய தினம் (18.12.2022) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில், கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர். சிவசுப்பிரமணியம் பத்மநாதன் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகம் மீதான நில ஆக்கிரமிப்புகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,“குறிப்பாக முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் தமிழர் தாயகத்தின் மீதான நில ஆக்கிரமிப்புக்கள் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்தல் தொல்லியல் அடையாளங்களை ஆக்கிரமித்தல் அதன் அடையாளங்களை மாற்றுதல் என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அழிவின் விளிம்பிலிருந்து தமிழ் இனத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் நில ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் குறிப்பாக நிர்வாக அலகுகள் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கட்சியின் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர், பொருளாளர், வடக்குமாகாண அவைத்தலைவர் மற்றும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள், வடக்குமாகாண சபையின் மேனாள் உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள்,அபிமானிகள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

