ஹிசாலினிக்கு நீதி வேண்டி கையெழுத்து போராட்டம்
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்து மரணமடைந்த சிறுமிக்கு நீதி வேண்டி வவுனியாவில் கை எழுத்துப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று (23) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த ஏற்பாட்டாளர்கள்,
ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டிக் குறித்த கை எழுத்துப்போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் பணி செய்யும் பகுதிகளில் பல்வேறு துஷ்பிரயோகங்களிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக கிசாளினியின் மரணத்துடன் தொடர்புபட்டவர்கள் தண்டிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அத்துடன் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களையும், தரகர்களையும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த கையெழுத்துப் பிரதிகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.