தொடருந்து பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு
தொடருந்து பயணச்சீட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நிலையங்களில் அச்சிடப்பட்ட பயணச்சீட்டுகளின் கையிருப்பு குறைந்து வருவதால் இலத்திரனியல் பயணச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை தொடருந்து சேவை எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைய அதிபர்களின் குற்றச்சாட்டு
அரச அச்சகத் திணைக்களத்தில் பயணச்சீட்டு அச்சடிக்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டு, அச்சிடும் உபகரணங்கள் இலங்கை தொடருந்து சேவை தலைமையகத்தின் அச்சிடும் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் போதிய பணியாளர்களை பணிக்கு நியமிக்கபடாமையால் அச்சிடும் செயற்பாடுகள் மந்தமடைந்துள்ளதாக நிலைய அதிபர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு
இந்த விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தப்படாவிட்டால், கொழும்பு கோட்டை, மருதானை, கம்பஹா, வெயங்கொடை, ராகம தொடருந்து நிலையங்கள் மற்றும் பல உப நிலையங்களில் பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



