சஞ்சீவ படுகொலையின் பின்னரும் நான்கு நாட்கள் நாட்டில் தங்கிய செவ்வந்தி..!
'கணேமுல்ல சஞ்சீவ' படுகொலை செய்யப்பட பின்னரும் இஷாரா செவ்வந்தி, 4 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்த விடயம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒரு வழக்கறிஞர் போல உடையணிந்து நீதிமன்றத்திற்குச் சென்ற இஷாரா செவ்வந்தி, கணேமுல்ல சஞ்சீவவை அழைத்து வரும் வரை வழக்கறிஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வறையில் தங்கியிருந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கான துப்பாக்கியை தண்டனைச் சட்டத்தின் புத்தகத்தில் மறைத்து வைத்து அதனை துப்பாக்கிதாரியான சமிந்துவிடம் செவ்வந்தி கொடுத்துள்ளார்.
4 நாட்கள் தலைமறைவு
துப்பாக்கி ஏந்திய சமிந்து, இஷாரா செவ்வந்தியுடன் நீதிமன்ற மண்டபத்திற்குச் சென்று வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தார்.
இதனையடுத்து, கணேமுல்ல சஞ்சீவ குற்றவாளி கூண்டில் ஏறியவுடன் அவரை சமிந்து சுட்டு கொன்றுள்ளார். இதன் பின்னர், இருவரும் சஞ்சீவ சுடப்பட்டார் என கூறி நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே ஓடிவிட்டதாகவும் இஷாரா செவ்வந்தி விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இலங்கையில் செவ்வந்தி 4 நாட்கள் தலைமறைவாகி இருந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலேயே அவர் தலைமறைவாகி இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
செவ்வந்திக்குரிய பணம்
பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கு மூன்று வாரங்கள் தங்கியிருந்த பின்னரே அவர் நேபாளம் சென்றுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.கே.பாய் என்பவரே செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
செல்வந்தியுடன் கைதான அவர் பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹெல்பத்தர பத்மேயின் சகா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வந்தியுடன் இணைந்து அவரும் வெளிநாட்டுக்குத் தப்பியோடியுள்ளார். அவர் ஊடாகவே செவ்வந்திக்குரிய பணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



