வியட்நாமில் கடும் வெள்ளப்பெருக்கு: 4 பேர் உயிரிழப்பு
ஹனோய் – வியட்நாமின் வடக்கு மாகாணமான லாய் சௌவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும் மழையினால், வெள்ளிக்கிழமை அதிகாலை முவோங் தான் கிராமத்தில் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவுகள்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த கிராமத்தில் செம்மண் மற்றும் வெள்ள நீர் புகுந்துள்ளதையும், சேதமடைந்த வீதிகள் மற்றும் வீடுகளின் ஒரு மூலையில் கற்கள் மற்றும் மரத்தடிகள் குவிந்துள்ளதையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காட்டுகின்றன.

கடந்த புதன்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தினால், அப்பகுதியில் வீதிகள், மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், சுமார் 238 ஹெக்டேயர் பயிர்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அரசாங்கத்தின் பேரிடர் முகாமைத்துவ ண நிலையம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை
வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் சனிக்கிழமை 250 மில்லிமீற்றர் வரை கடும் மழை பெய்யக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளதால், மேலதிக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியிலேயே வியட்நாமில் மழையுடன் கூடிய காலநிலை உச்சத்தை அடைவதுடன், இக்காலகட்டத்தில் சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றாகும்.
கடந்த ஆண்டு இயற்கை அனர்த்தங்கள், முக்கியமாக வெள்ளப்பெருக்கினால் வியட்நாமில் 489 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri