இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருளுடன் பலர் கைது
தமிழகம் - தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து பெருந்தொகையான போதைப்பொருட்கள் இலங்கைக்குக் கடத்தப்படவிருப்பதாகக் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீன்பிடி படகு ஒன்றில் 10 கிலோகிராம் போதைப்பொருட்களைக் கடத்த முயற்சித்த போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழக கியூ பிரிவு பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி பல கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் கீழ வாய்ப்பார் மற்றும் சிப்பிகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவர்களுக்கு எவ்வாறு இந்த போதைப்பொருட்கள் கிடைக்கப்பெற்றன, அவற்றை இலங்கைக்குப் பரிமாற்றும் முறை மற்றும் அதற்கான நிதி பரிமாற்றம் போன்ற விடயங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.