தீப்பரவலுக்கு உட்பட்ட கப்பல் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம்
இலங்கை கடலில் தீப்பரவலுக்கு உட்பட்ட "எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல்" கப்பல் அனர்த்தம் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம் என ஜேவிபி கோரியுள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது இந்த கோரிக்கையை விடுத்தார்.
கப்பல் அனர்த்தம் தொடர்பான அனைத்து உண்மைகளையும் அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் மற்றும் அரசியல் அதிகாரம் மற்றும் பேரழிவிற்கு காரணமான அதிகாரிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு எதிர்கொண்ட மோசமான சம்பவம் என்று அவர் குறிப்பிட்டார். இலங்கையின் கடலை அடைந்தபோது கப்பலில் சிறிது புகை கிளம்பியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கப்பலுக்கு வேறு இரண்டு துறைமுகங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை கடலுக்குள் பிரவேசிக்க கப்பலுக்கு யார் அனுமதி அளித்தார்கள் என்பது சந்தேகமே.
அத்தகைய முடிவை எடுப்பதற்கான காரணங்கள் என்ன, என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கப்பல் மூழ்குவதற்கு முன்னர் அதிகாரிகள் தீயை அணைக்கவோ அல்லது ஆழமான கடலுக்கு இழுத்துச் செல்லவோ தவறிவிட்டார்கள் என்பது சந்தேகத்திற்குரியது என்றும் அனுரகுமார குறிப்பிட்டார்.
சில ஆபிரிக்க நாடுகளின் ஊழல் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் ஆபத்தான பொருட்கள் மற்றும் கழிவுகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஆபிரிக்க கடல்களில் மூழ்கிய ஒரு காலம் இருந்தது.
இலங்கையிலும் அப்படியான சம்பவமா நடக்கிறது என்று மக்கள் சந்தேகம் எழுப்புகிறார்கள். இந்த கப்பல் தொடர்பில் இலங்கைக்கு இழப்பீடு கிடைக்கும் என்று ஒரு அமைச்சர் கூறியுள்ளார்.
எனவே கப்பல்களை மூழ்கடித்து
டொலர்களை சம்பாதிப்பதற்கான செயலை அரசாங்கம் செய்திருக்கிறதா என்று தாம்
சந்தேகிக்கிப்பதாக அனுரகுமார தெரிவித்துள்ளார்.