போர்க்குற்ற விசாரணையில் ரஷ்ய படை வீரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை
உக்ரைனில் இடம்பெற்ற போர்க் குற்ற விசாரணையில் ரஷ்யப்படை வீரர் ஒருவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் நிகழ்த்த தொடங்கியதிலிருந்து இடம்பெற்ற முதல் போர்க்குற்ற விசாரணை இதுவாகும். இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட ரஷ்ய கமாண்டர் வாதிம் ஷிஷிமரின் ஆவார்.
இவர்மீது உக்ரைனின் வட கிழக்கு பகுதியில் உள்ள சுபாகிவ்கா என்ற கிராமத்தில் ஒலெக்சாண்டர் ஷெலிபோவ் என்ற 62 வயது முதியவரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்நிலையில் அவரும் முதியவரைச் சுட்டதை ஒப்புக் கொண்டாலும், தான் ஆணைக்கு இணங்க செயற்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், தன்னால் கொலை செய்யப்பட்ட முதியவரின் மனைவியிடம் வாதிம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் உக்ரைனில் மேலும் பல போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் குடிமக்களுக்கு எதிராக 11 ஆயிரம் குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.