செனகல் அமைச்சர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடை: எரிபொருள் விலை உயர்வால் அதிரடி நடவடிக்கை
ஈரான் போர் காரணமாக உலகளவில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், செனகல் அரசு தனது செலவினங்களைக் குறைக்கும் பொருட்டு அமைச்சர்கள் அனைவரும் அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் தடை விதித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டுப் பிரதமர் உஸ்மான் சோன்கோ பேசுகையில், தற்போதைய மசகு எண்ணெய் விலை வரவு செலவு திட்டத்தில் கணக்கிடப்பட்டிருந்ததை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தச் சூழலால் தனது சொந்த வெளிநாட்டுப் பயணங்களையும் அவர் ரத்து செய்துள்ளார்.
"Praise be to Allah" - சற்று முன்னர் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவு.. ஈரானுக்கு மிக மோசமான வார்த்தைகளால் எச்சரிக்கை!
பொதுக்கடன் 130 வீதம்
செனகல் தனது சொந்த எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியைத் தொடங்கியிருந்தாலும், எரிபொருள் இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளதாலும், நாட்டின் பொதுக்கடன் 130 வீதமாக அதிகரித்துள்ளதாலும் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல், ஆபிரிக்காவின் பிற நாடுகளும் இந்த எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தென்னாபிரிக்கா பெட்ரோல் மீதான வரியைக் குறைத்துள்ளது.
எத்தியோப்பியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டால் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன் தெற்கு சூடானில் மின்சாரம் ஒதுக்கீடு முறையில் வழங்கப்படுகிறது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் உர விநியோகம் பாதிக்கப்பட்டு, கிழக்கு ஆபிரிக்காவில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்தச் சூழலை ஒரு "உணவுப் பாதுகாப்பு காலக்குண்டு" என மனிதாபிமான அமைப்புகள் விவரித்துள்ளன.