ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம் அனுப்பி வைப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குத் தமிழர் தரப்பு குரலாக உறுதியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து அதன் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஸேந்திரன் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும்,
இந்த கடிதத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை பாரப்படுத்துவதே தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரே வழி, காணாமல் போனோருக்கான அலுவலகம் என்பது இலங்கை அரசின் வெறும் ஏமாற்று தந்திரமே.
தொடரும் அடக்குமுறைகளைக் கண்காணிக்க மனித உரிமை ஆணைக்குழு ஒரு விசேட தூதுவரை நியமிக்க வேண்டும்.
அத்தோடு, வடக்கு கிழக்கில் மனித உரிமை ஆணையக்கத்தின் ஒரு கள அலுவலகம் திறக்கப்பட்டுத் தொடரும் அடக்குமுறைகள் கண்காணிக்கப்பட வேண்டும்.
இராணுவமயமாக்கல் பல்வேறு பரிணாமங்களில் நடந்து தமிழ் மக்களின் இருப்பு தற்போதும் கேள்விக்கு உள்ளாக்கப்படுவது குறித்து ஐ.நா பிரேரணை கவனத்தில் எடுக்காமை மிகுந்த கவலைக்கு உரியது.
இது குறித்து ஐ.நா கவனம் செலுத்த வேண்டும். இலங்கையின் நடைமுறை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் , தமிழர்களின் தேசிய இனப்பிரசனைக்கான தீர்வுக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக் கூட கருதப்பட முடியாதது.
இலங்கை பல் தேச கட்டமைப்பு கொண்ட நாடாக உருவாகக்கூடிய , தமிழர்களின் தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு அரசியலமைப்பு மூலமே தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.