கடற்படையினரின் அசமந்தப்போக்கை கண்டித்த செல்வராசா கஜேந்திரன் - இடைநடுவே வெளிநடப்பு செய்த பிரதிநதிகள்
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த நபர்களின் குறுக்கீடு காரணமாக வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன், பிரதிநிதிகள் இடைநடுவில் வெளிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போயிருந்த கடற்றொழிலாளர்களை காப்பாற்றுவதற்கு கடற்படை தரப்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
அவ்வாறு செயற்பட்டிருந்தால் அவர்களை தேடும் நடவடிக்கையில் முன்னேற்ற நிலையினை எட்டியிருக்க முடியும் என பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போதே மேற்குறித்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங் கிணைப்பு குழுக்கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் தலைமையில் நேற்று(05.06.2026) 2.30 மணியளவில் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் பணி
இந்தக் கூட்டத்தில், பருத்தித்துறை நகர பிதா வின்சன்ட் டீ போல். டக்ளஸ்போல், வல்வெட்டித்துறை நகரசபை உபதவிசாளர் நா.பத்மநாதன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உ.யுகதீஸ், உப தவிசாளர் சிறீகாந்தன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், பருத்தித்துறை, வல் வெட்டித்துறை நகர சபைகள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை என்ப வற்றின் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், திணைக்களங்களின் பிரதிநிதிகள், பொலிஸ், இராணுவ அதிகாரிகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடமராட்சி கடலில் மீன்பிடி நடவடிக்கையின் போது காணாமல் போயிருந்த நான்கு கடற்றொழிலாளர்களையும் தேடும் பணியில் கடற்படையினரது பங்குபற்றுதல் தொடர்பில் பருத்தித்துறை கடற்படை முகாம் பொறுப்பதிகாரி விளக்கமளித்திருந்தார்.
கடும் காற்றுடன் கடல் கொந்தளிப்பு காணப்பட்டமை தேடுதல் நடவடிக்கையின் போது சவாலாக இருந்தது என அவர் கூறியிருந்தார்.
மறுப்பு தெரிவித்த செல்வராசா கஜேந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் பிரதிநிதியாக பங்கேற்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த கருத்தை மறுத்து பதிலளித்திருந்தார்.
எமது கடற்றொழிலாளர்கள் சாதாரண படகில் சென்று இந்த கடற்கொந்தளிப்புக்கு மத்தியில் தேடுதல் நடத்தியுள்ளார்கள். ஆனால் எமது மக்களுக்கு ஒரு நெருக்கடி வரும் போது கடற்படையால் உரிய முறையில் செயற்பட முடியாதென்றால் அவர்கள் எங்கள் மண்ணில் இருப்பதில் அர்த்தமில்லை.
ஏற்கனவே இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடி உள்ளிட்ட காரணங்களினால் எங்கள் கடல் வளம் அழிக்கப்பட்டு கடற்றொழிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் சுடலில் காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படை ஈடுபடவில்லை. அவர்கள் தேடியதை தாம் கண்ணால் காணவில்லை என தேடுதலில் ஈடுபட்ட உள்ளுார் கடற்றொழிலாளர்கள் பகிரங்கமாக கூறியுள்ளனர். ஆனால் கடற்படை தேடியது என இங்கு சொல்லப்படுவது. இந்த நிலை மிக வேதனையானது.
உடனடியாக கடற்படை செயற்பட்டிருந்தால் அவர்களை கண்டுபிடித் திருக்கலாம் என்றார். இதே கருத்தை அப்பகுதி கடற்றொழிலாளர்களும் தெரிவித்ததாக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெ.ரஜீவன் ஏற்றுக் கொண்டு கருத்து தெரிவித்திருந்தார்.
பிரதிநிதிகள் வெளிநடப்பு
இதன்போது, கடற்றொழில் அமைச்சரின் வடமராட்சி இணைப்பாளர் குறுக்கிட்டு கடற்படையினர் மீதான குற்றச் சாட்டை மறுத்திருந்தார்.
அதற்கு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், முதல் நாளில் இருந்து நடந்தவற்றை கூற முற்பட்ட போது, அனுமதி பெறாத ஊடகவியலாளர்களை வெளியேற்ற வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர் குறுக்கீடு செய்திருந்தார்.
அதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பிரதேச செயலாளரது தலையீட்டில் நிகழ்வுகளை தொடர்ந்து யாரும் பதிவு செய்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது.
தொடர்ந்தும் கடற்படையினர் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் பங்கேற்றிருந்த பிரதிநிதிகள் ஏனையவர்களை பேசவிடாது குறுக்கீட்டினை மேற்கொண்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரது பிரதிநிதிகளாக பங்கேற்றிருந்த செ.கஜேந்திரன், கு.தினேஸ் ஆகியோர் இடைநடுவே வெளிநடப்பு செய்துள்ளனர்.