மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
உறவுகள், உரிமைகள் என்பதை விட சுயகட்டுப்பாடுகளை அரசாங்க உத்தியோகத்தர்களும்,பொதுமக்களும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்து கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவிட் தொற்று பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருவதன் காரணமாகச் சுகாதாரத் துறையினருக்கும்,பாதுகாப்புத் துறையினருக்கும் ஒத்துழைத்து சுய கட்டுப்பாடுகளுடன் வாழும் போதே இந்த தாக்கத்தினை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரசாங்க உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி கவலையீனமாக நடந்து கொள்வதாக பொலிஸாரினால் சுட்டிக்காட்டப்பட்டதற்கு இணங்க கட்டுப்பாடுகளை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
உறவுகள், உரிமைகள் என்பதைவிட சுயகட்டுப்பாடுகளை அரசாங்க உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பின்பற்றவேண்டியதன் அவசியத்தினை உணர்ந்து கொள்ளவேண்டும். இது மிகவும் கொடூரமான அலை இலங்கை உட்பட உலக நாடுகளில் பரவிவருகின்றது.
ஆகவே இந்த ஊரடங்கு சட்டத்தினை கடைப்பிடித்து சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைத்து நாங்களும் சுய கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால்தான் நாங்கள் இந்த தொற்றினை கட்டுப்படுத்தமுடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து வைத்தியசாலைகள் ஊடாக எந்தவேளையிலும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் உதவியுடன் நடமாடும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.



