வெளிநாடு சென்றவருக்கு அதிர்ச்சி! இலங்கையிலுள்ள வீட்டில் நடந்த பயங்கரம்
கண்டி - தலத்துஓயா, குருதெனிய பகுதியில் அமைந்துள்ள வெளிநாட்டில் வசித்து வரும் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான வீட்டின் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் வைத்தியரின் வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான 28 வயதுடைய இளைஞர், கடந்த ஒரு வருட காலமாக சிறுகச் சிறுக பொருட்களைத் திருடி கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாரிய கொள்ளை
திருடப்பட்ட பொருட்களில் ஒரு பகுதியை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த வைத்தியர் இந்தக் இளைஞன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, பல சந்தர்ப்பங்களில் அவருக்குப் பாரிய நிதி உதவிகளைச் செய்துள்ளார்.

சந்தேக நபரின் இதய அறுவை சிகிச்சைக்காக 46 லட்சம் ரூபாவையும், நீண்ட காலமாகக் குழந்தை பேறு இல்லாத அவரது மனைவிக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்காக 40 லட்சம் ரூபாவையும் வைத்தியரே செலவிட்டுள்ளார்.
மேலும், தோட்டத்தைப் பராமரிக்க மாதம் ஒரு இலட்சம் ரூபா சம்பளம் வழங்கியதுடன், இளைஞன் வந்து செல்வதற்காக முச்சக்கர வண்டி ஒன்றையும் வைத்தியர் வாங்கிக் கொடுத்துள்ளார். தையல் வேலை செய்வதற்காக சந்தேக நபரின் மனைவிக்கு 6 இயந்திரங்களையும் அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.
வைத்தியரின் தோழியான நுவரெலியாவை சேர்ந்த பெண் ஒருவர், மாதம் ஒருமுறை இந்த மூன்று மாடி வீட்டையும் 20 ஏக்கர் தோட்டத்தையும் பார்வையிட வருவது வழக்கமாகும்.
அவ்வாறு வந்த போது குளியலறை உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் காணாமல் போயிருப்பதை அவர் அவதானித்துள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இது குறித்து இளைஞனிடம் கேட்டபோது, யாரோ திருடிவிட்டதாகக் கூறி அவரே தலத்துஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.

எனினும், குறித்த பெண், வைத்தியருக்கு இது பற்றித் தகவல் வழங்கியதையடுத்து, அவரது ஆலோசனையின் பேரில் மீண்டும் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிஸார் வீட்டின் சிசிடிவி காட்சிகள் மற்றும் சந்தேக நபரின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது, திருட்டில் இளைஞனுக்கு உள்ள தொடர்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மண் அகழ்வு இயந்திரங்கள், மின்பிறப்பாக்கிகள், குளிரூட்டிகள் உள்ளிட்ட பல கோடி பெறுமதியான பொருட்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய தலத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.