அதிகவிலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்
வவுனியாவில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு தொகை சீமெந்து மூடைகள் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் வீதியில் இன்று(18) காலை லொறி ஒன்றில் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டிருந்த சீமெந்து மூடைகள் தொடர்பாக வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் விசாரணையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சீமெந்து மூடைகளில் அச்சிடப்பட்டிருந்த விலைக்கு அதிகமாக அவை விற்பனை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காகக் குறித்த முகவர் மீது வழக்கு தாக்கலினை செய்த பாவனையாளர் அதிகாரசபை, ஏனைய சீமெந்து மூடைகள் அனைத்தையும் அதன் பெறுமதிக்கேற்ப நிர்ணய விலையினை முகவரிடம் செலுத்தி, மாவட்டத்தில் அமைந்துள்ள அரசாங்க திணைக்களங்களின் கட்டுமான தேவைக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.