இலங்கையில் கட்டாயமாகும் நடைமுறை தொடர்பில் நிம்மதி தரும் செய்தி
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான ஆசனப்பட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வாகன சாரதிகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, உற்பத்தியின் போது ஆசனப்பட்டி பொருத்தப்படாத வாகனங்களுக்கு, அதனைப் பொருத்தி கொள்வதற்காக மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அறிவிப்பு
ஆசனப்பட்டி சட்டம் இன்று (20) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை முன்னதாக தெரிவித்திருந்தது.
முன்னைய அறிவிப்பின் படி, வாகனங்களைச் செலுத்தும்போது ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிலுள்ள அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிந்திருக்க வேண்டும்.
வாகனங்களின் முன் இருக்கைகளில் மட்டுமன்றி, பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கட்டாய நடைமுறை
இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் நேற்றுடன் (19.06.2026) நிறைவடைந்துள்ளது. இதன்படியே, இன்று முதல் இந்தச் சட்டம் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டிருந்தது.
சாதாரண வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதியும், முன் இருக்கையில் பயணிக்கும் மற்றைய பயணியும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும் அதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதி உள்ளிட்ட அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழலிலேயே வாகன சாரதிகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.