இலங்கைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
இலங்கையில் சமூக மட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய கொவிட் மாறுபாடு எனப்படும் டெல்டா பாரதூரமான திரிபு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பரவியுள்ள கொவிட் மரபணுவை விடவும் இரண்டு மடங்கு வேகமாக இந்த வைரஸ் பரவ கூடும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனிதர்களின் சுவாச கட்டமைப்பினுள் டெல்டா மாறுபாடு நீண்ட நேரம் இருக்க கூடும் எனவும், இதன் காரணமாக நோய் தொற்று தீவிரமடைய கூடும் எனவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டெல்மா மாறுபாடு எனப்படுவது திரிபடைந்த கொவிட் மரபணுவாகும். அது உலகில் 80 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தளர்த்தப்படவிருந்த முடக்க நிலை கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிப்பதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர, “தெமட்டகொட பிரதேசத்தில் 8 பேரின் மாதிரிகள் மாத்திரமே பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. அதில் 5 பேருக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட ஏனைய நோயாளிகளின் மாதிரிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவற்றினை பரிசோதனை செய்வதற்காக விசேட பரிசோதனை கிட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் எந்த மாறுபாடினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். சுகாதார கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். தடுப்பூசிகளை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும். இதன் ஆபத்தை தவிர்த்து விடலாம் என எங்களால் கூற முடியாது.
எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் வைரஸ் வெற்றி பெறவே முயற்சிக்கும்.
இதனால் மக்கள் அவதானமாக செயற்பட்டால் மாத்திரமே ஏற்படும் ஆபத்துக்களை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.