வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய தமிழ் தாய் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
குருநாகலில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் தாயார் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி வெலேகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவர் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருந்தார்.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை
கடந்த 25ஆம் திகதி உயிரிழந்த மாணவனின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
“நானும் என் இரண்டு மகள்களும் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தோம். என் மகனுக்கு உடல்நிலை சரியில்லை, நாட்டுக்கு வருமாறு தொலைபேசி அழைப்பு வந்தது.
இவ்வளவு அவசர செய்தி எனக்கு ஒருபோதும் கிடைக்காததால், பதற்றத்துடன் 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்தேன். நான் வந்தபோது, என் மகன் குருநாகல் போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தார்.
என் மகனால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை” என உயிரிழந்த மாணவன் திலின விராஜின் தாயார் கோவிந்தன் புஷ்பராணி கண்களில் கண்ணீருடன் கூறினார்.
நண்பர்களால் தாக்குதல்
என் மகன் கடைசியாக 14 ஆம் திகதி இறுதியாக கதைத்தார். வெளிநாட்டில் இருந்து வரும் போது சில ஆடைகளை கொண்டு வருமாறு கேட்டிருந்தார்.
அதன் பிறகு, அந்த மகனுடன் ஒரு வார்த்தை கூட பேச கிடைக்கவில்லை. என் மகனின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து என் மகனை ஏன் இப்படித் தாக்கினார்கள் என்பதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். எனது ஒரே மகன், அவரது நண்பர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஒரு தாய் எப்படி இவ்வளவு துயரத்தை தாங்கிக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.