தேசிய பாடசாலை திட்டத்தில் தோப்பூர் பிரதேசம் உள்வாங்கப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது - இம்ரான் எம்.பி
தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் அரசாங்கத்தின் தேசிய திட்டத்தில் திருகோணமலை மாவட்ட பல பாடசாலைகள் உள்வாங்கப்பட்டமை மகிழ்ச்சி அளிக்கிறது.
இருந்தும் இந்த பட்டியலில் தோப்பூர் பிரதேச பாடசாலைகள் எதுவும் உள்வாங்கப்படாமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியல் காரணங்களுக்காக இந்த பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டதா? என்ற கேள்வியை அப்பிரதேச மக்கள் முன்வைக்கின்றனர்.
காரணம் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த சகல தகுதிகளும் கொண்ட கடந்த காலங்களில் சிறந்த பெறுபேற்றை வெளிக்காட்டிய அல்ஹம்றா மத்திய கல்லூரி மற்றும் தோப்பூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகள் இப்பிரதேசத்தில் உள்ளன.
இதில் ஒரு பாடசாலையை இத்திட்டத்தில் உள்வாங்கி இருக்கலாம். தோப்பபூருடன் சேர்த்து சீனக்குடா நாளந்தா மகா வித்தியாலயம் குச்சவெளி அந்நூரியா மகா வித்தியாலயம் வெள்ளைமணல் அல் - அஸ்கர் மகா வித்தியாலயம் மூதூர் சேனையூர் மகா வித்தியாலயம் கிண்ணியா குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளிடம் முறையீடு செய்துள்ளேன்.
விரைவில் இது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.