நாடளாவிய ரீதியில் புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பம்
தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையானது இன்றையதினம்(10) நாடளாவிய ரீதியில் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது.
அந்தவகையில் யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் வட்டு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திலும் பரீட்சை ஆரம்பமாகியது.
யாழ்.மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களிலும் ஆரம்பமாகி சுமூகமாக நடைபெற்றது.
இதன்போது மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பரீட்சையில் கலந்து கொள்வதை அவதானிக்க முடிந்தது.
மலையகம்
ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று(10) நாடளாவிய ரீதியாக இடம்பெறுகின்றது.
அந்தவகையில் மலையகத்திலும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்திருந்தது.
அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைக்கு மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது.
அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடதக்கது.
நானுஓயா
இலங்கை முழுவதும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது இன்று (10) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.
அந்தவகையில் நானுஓயா நகரில் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்தது.
நானுஓயா நகரில் மத்தியில் அமைந்துள்ள மமா/நு/நாவலர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை மண்டபத்திற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகைத்தந்தனர்.
அத்துடன் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பெரியவர்களிடமும் பெற்றோர்களிடமும் ஆசிகள் பெற்று பெற்றோர்கள் இன்று காலை ஆர்வத்துடன் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்துவந்ததையும் காணமுடிந்தது.
மேலும், பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
அம்பாறை
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் ஞாயிற்றுக்கிழமை (10) நாடெங்கிலும் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று கல்வி வலயங்களில் இன்று இப்பரீட்சை ஆரம்பமானதுடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றதை காண முடிந்தது.
அத்துடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு பெற்றோருடன் வருகை தந்திருந்தனர்.
மேலும் பரீட்சை நிலையங்களுக்கு சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் வருகை தந்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
2025 ம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களிலும் பரீட்சைகள் அமைதியான முறையில் நடைபெற்றதாக வலய கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
பரீட்சை நீலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
அதிகளவான பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்கள் பிள்ளைகளை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் சென்றமையை காணக்கூடியதாக இருந்தது.
மட்டக்களப்பு
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமான போது பார்வையற்ற மாணவியொருவரும் பரீட்சைக்கு தோற்றினார்.
மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் பயின்று வரும் இம்மாணவி மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் பரீட்சை மண்டபத்தில் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.
பிறவியிலேயே பார்வை இழந்த இம் மாணவி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையிலிருந்து இன்று காலை பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.













நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா




