கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள்: டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை
கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் அந்ததந்தப் பிரதேசங்களை சேர்ந்த மக்கள் நன்மையடையும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று (01.12.2022) இடம்பெற்ற சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த, மற்றும் நக்டா நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இறால் பண்ணை முகாமைத்துவம்
இதன்போது, வட்டவான் பகுதியில் பிரதேச மக்களுக்கான வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இறால் பண்ணையின் முகாமைத்துவம் மற்றும் செயற்பாடுகள் வினைத்திறன் இன்றி இருப்பதாகவும், குறித்த பண்ணை அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக செயற்பட்டு வருகின்றது என சிவனேசத்துரை சந்திரகாந்தன் தனது ஆதங்கத்தினை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட்டவான் இறால் பண்ணையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான குழு ஒன்றினை அமைத்துள்ளதுடன், குறித்த குழுவினால் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கையின் அடிப்படையில், எதிர்வரும் தை மாதத்தில் இருந்து பண்ணையின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.



